மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு - பகுதி I

மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவின் முன்னுரை

சிறந்தது நல்லது அருமையானது என்பவையும் அவற்றின் எதிர்பதமும்
தரும் மதீப்பீடு என்ற அதிகாரச் சொல்லின் மீதுள்ள அச்சம் காரணமாக
எதைப்பற்றியும் இறுதி வார்த்தை கூறமுடியாதுள்ளது. என பஹீமா ஜஹானின் தீவில் தனித்தமரம் என்ற கவிதைக்கு பின்னூட்டமிடும் போது கூறியிருந்தேன். அதற்குப் பின் நண்பர் அசரீரி பஹீமாவின் கவிதைக்குப் பின்னூட்டமிட்ட போது "மதீப்பீடு என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக பர்சான் முடிவெடுத்துக் கொண்டதற்கான நியாயம் என்னவென்பதுதான் புரியாமலிருக்கின்றது" என்று எழுதியிருந்தார். பின்னர் பஹீமா இது தொடர்பாக கதைப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் சொன்னார். மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு எழுதப்பட இந்த விடயங்களே காரணமாகவிருந்தன. இரண்டு நண்பர்களிற்கும் எனதுலகம் நன்றி தெரிவிக்கிறது. இதனுடன் அனைத்து நண்பர்களும் உரையாடமுடியும். தனித்த பிரதிகள் என்றிருப்பின் Email செய்யுங்கள். இல்லாதவிடத்தில் பின்னூட்டமாய் இடுங்கள்.

மதீப்பீட்டு அதிகாரத்திற்கெதிரான Zero பதிவு - பகுதி I

சமூக அதிகாரங்களில் காணப்படும் அமைப்பியல்புகள் மிக அதிகமாக அனைத்து இனக்குழுக்களையும் ஆழும் தன்மை வாய்ந்துள்ளமையை நாம் அவதானிக்கிறோம். டெல்யூஸ் குறிப்பிடும் State philosophy என்கின்ற அரச தத்துவமானது அதிகாரம் கூடியதாகவும் மூடுண்ட அமைப்பு, இயல்புகளைக் கொண்டதாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. இத் தத்துவத்தின் வீச்சினால்தான் சமூக அதிகாரத்தினை இது தக்கவைத்து தன் இயங்கியலை மேற்கொள்கிறது. இந்த அரச தத்துவமானது தனக்குள்ளே சில நியதிகளையும் பிரமாணங்களையும் விதி ஒழுங்குகளையும் மிக ஆழமாக புதைத்துக் கொண்டுள்ளது. இது ஆழமாகப் போடப்பட்ட இரும்புச் சுவர்களைப் போல் தன் அடித்தளத்தில் மாற்றங்களுக்கு எவ்வித இடமும் கொடுக்காமல் இருக்கும். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மதீப்பீட்டு அதிகாரத்தின் படிநிலைகளை நன்றாக வரிந்து கட்டி அதன் பாலான தன் அடியாட்களை வளர்த்து அவர்களை போஷித்தும் வைத்துக் கொள்ளும். எவ்வாறு தீவிரவாதம் கருத்தியலை தன் பங்காளிக்கு அவனை அறியாமலே ஊட்டிவிடுகின்றதோ அதே போலதான் அரச தத்துவமும் காணப்படுகின்றது/ காணப்படும்.

ஆனால் Anti state philosophy என்பது திறந்த அணுகல் முறையாக இருக்கிறது. அனைத்து வகையான நியதிகள், வரைபுகள், பிரமாணங்கள் என்பவற்றினை மறுதலிப்பதே இதன் பிரதான பண்பாட்டாய் காணப்படும். அங்கு இரண்டாவதாய் குறிப்பிடப்பட்ட Anti state philosophy மதீப்பீடு என்கிற அதிகாரத்தின் எல்லைகளை உடைத்து மற்றமைகளின் செயற்பாடுகளிற்கும் அவற்றின் பங்குபற்றுதல்களுக்கும் இடம் கொடுக்க உழைக்கும். இங்குதான் உரையாடல் என்ற பதிவு முன்வைக்கப்படுவதினை நாம் காணலாம். நாம் இன்று காணுகின்ற பல்வேறு விடயதானங்கள் பகுத்தறிவு என்கிற ஆளுகையினால் கட்டமைக்கப்பட்டது. எவ்வளவுதான் பகுத்தறிவின் விளைவுகளை இன்று நாம் எதிர்த்து கூக்குரலிடுகின்ற போதும் அது நம்முன்னே மிகவும் இலாபகமாக இன்றும் உட்கார்ந்து கொண்டிருப்பதினை மறுக்க முடியாது. பகுத்தறிவின் வன்முறை தொடர்பாகவும் அதன் வெறியாட்டத்தினால் ஏற்பட்ட உலக பின்னடைவுகள் பற்றியும் மேற்கிலே பல்வேறு வாதங்களும் கருத்தியல் போராட்டங்களும் இடம் பெற்று களைத்துவிட்டன. தெரிதா, பூக்கோ, தெல்யூஸ் கத்தாரி, விட்கென்ஸ்டெய்ன், பாத்ரிலா, லியோர்தான் ஆகியோரும் இன்னும் பலரும் பகுத்தறிவின் நிஜ முகத்தினை தோலுரித்துக்காட்டினர். என்றாலும் பகுத்தறிவின் ஆழ்கை இன்னமும் நம்மை விட்டும் அகன்று விடவில்லை. ஏனெனில் நமது கடன்வாங்குகின்ற கல்விக் கொள்கை இன்னமும் நமக்காக எதனையும் சிந்திக்கத் தூண்டவில்லைதானே. ஐரோப்பாவின் விழிப்பு காலங்களையும் இரண்டாம் உலக மகா யுத்ததின் தோற்றுவாய் காரணிகளையும் தானே நாம் இன்னமும் வகுப்பறைகளில் கற்கிறோம். மாறாய், ஜப்பானிய கழிவறைத் தொழில் நுட்பத்தின் நுணுக்கங்கள், Micro chip கலன்கள், உலக பங்குச் சந்தையில் அண்மைய விலையேற்றத்தின் பிரதான அரசியல் என்ன?, 2055ம் ஆண்டின் பொதுமைக் கலாசார மற்றும் மொழிப் பண்பாட்டின் எதிர்விளைவுகளை கட்டுப்படுத்தும் சமூகவியல் காரணிகளின் தன்மைகள், நவீன தொழில்நுட்ப போராட்டத்திற்கு முகம் கொடுத்தவாரே நம் மரபினை உயர்த்திப் பிடித்து அதனையும் வாழ வைப்பதற்கான புதிய Programs பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதே இல்லையே, நமது கல்விக்கொள்கை கதைப்பதே இல்லையே.. இது பகுத்தறிவு, அக்கிரமிப்பு, கல்விச்சந்தை என்பன நமக்களித்தவைகள்.

இவற்றை எவ்வாறு பகுத்தறிவின் வன்முறை விளைவுகளாக நாம் இனங்காண்கிறோமோ அதே போல்தான் மற்றவை மீதான மதீப்பீட்டுத் தன்மைகள் கூட பகுத்தறிவின் விளைவுகளே. நாமும் பகுத்தறிவின் பிள்ளைகளாக வளர்க்கப்பட்டவர்கள் என்ற அம்சமே அனைத்தையும் மதீப்பிட்டே விடயங்களினைத் தீர்மானிக்கும் தனிமையினை நம்முடன் வைத்துள்ளது. ஆனால், இதன் அதிகாரத்தின் வன்முறைகளை இனங்காண்பதென்பது கடும் கஸ்டமாகும். இங்குதான் சிறந்தது நல்லது அருமையானது என்பவைகளை எடுத்தக் காட்ட விளைகிறேன். நண்பரே ஒன்றினைப் பற்றி - சிறந்தது, நல்லது, அருமையானது - இப்படி நாம் கூறுவதற்கு என்ன வகையான அளவுத் திட்டத்தினைக் கொண்டிருக்கிறோம்? இங்கு ஒன்றின் மாற்றமுறும் தன்மைகளை/ ஒன்றின் தளத்தினை/ அதன் வளர்ச்சியினை நாம் மதீப்பீடு என்பதன் ஊடாக கண்டு கொள்கிறோம். ஆனால், இங்கு அதனை மதீப்பிடுகின்ற போது ஏற்படும் புறமொதுக்கங்கள், தூரமாக்கல்கள், மற்றும் அளவு கடந்த புகழ்ச்சிகள், பிம்பமாக்கல்கள், கட்டமைப்புக்கள் இதனால் ஏற்படுகின்ற வன்முறைகள் அதனுடான விளைவுகள் என்பவை பற்றி கணிப்பீட்டு அக்கறை தொலைந்தே விடுகிறதல்லவா? இதைத்தான் பகுத்தறிவு நமக்கு மதீப்பீட்டின் பக்கவிளைவாய் தந்திருக்கின்றது. அதாவது ஒன்றினைப் பற்றிக் குறிப்பிடும் போது அதில் புதைந்து கிடக்கும் இதர துணைக் காரணிகளை நாம் விட்டுவிடுகிறோம். மற்றமைகளை மறுத்தே பகுத்தறிவு மதீப்பீட்டை முன்வைக்கிறது. இந்த நிலைப்பாடு மிகப்பெரிய அதிகார ஆட்டம் இல்லாமல் வேறென்ன?

நாம் மிகச்சிறிய விடயங்களில் இருந்தே இதனை செய்து கொண்டு இருப்பதனால் இதன் தீச்சுவாலை நமக்கு பாதிப்பானதாய்/ வன்முறை கொண்டதாய் உணர முடியாமல் இருக்கலாம். இந்த மதீப்பீட்டு நிலையின் போது நமக்குள்ளே ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்ற முற்கற்பிதங்களே தம் இயங்கியலை செய்கின்றன. குறித்த விடயத்தினை நாம் ஒரு சட்டத்தினூடாகவே பார்க்கப் பழகிவிட்டோம். நண்பரே இதுதான் அதிகாரம் என்கிறேன்.

இங்கு ஒரு பிரதியை எடுத்துக் கொண்டு நோக்குவோம்.

பிரதியாளனின் பிரதிதான் நம்மிடையே வாழும் என நான் நம்புகிறேன். பிரதியாளனின் உள்நோக்கத்தினை ஏன் எடுத்து ஆராய்ந்து உங்கள் மதீப்பீட்டினை தெரிவிக்க வேண்டும். ஆனால் அவனின் பிரதியை பொருளாகக் கருதி அதனுடன் பயணிக்கலாமல்லவா?. பயணத்தில் விருப்பு இருந்தால் தொடர்வது இல்லாவிட்டால் இடையில் இறங்கிவிடுவது. அளிப்புரிமை கிடைத்ததுவாய் பிரதியை ஏன் நுகர்ந்து கொள்ள முடியாது. அது வேறு பயணத்திற்கானதாய் இருப்பினும் தன்பாதை மாற்றத்துடன் நம்முடனும் பயணிக்க முடியுமல்லவா? மதீப்பீட்டினை வைத்துப் (பகுத்தறிவின் அதிகாரத்தினை வைத்துப்) பார்க்கின்ற போது பிரதி பிரதியாளனுக்குள்ளே இருந்து வெளிவர முடியாத இக்கட்டான சூழலில் அகப்பட்டு சிக்கித் தவித்துவிடும். இந்தக் கொலையினை மதீப்பீட்டு அதிகாரமேசெய்கிறது. இவ்வாறான நிலைகளில் பிரதியின் வாழ்க்கை பிறக்கும் போதே முடிந்து விடுவதினை நாம் காணலாம்.

ஆக, மனிதன் பயன்படுத்தும் அனைத்து மதீப்பீட்டு முறைமைகளையும் தர்க்கங்களின் கொள்கைகள், பகுத்தறிவு, கோட்பாடுகள், நிறுவனங்கள் என்பவையே தீர்மானிக்கின்றன. ஏதோவொரு முற்கற்பிதங்களுடன் பிரதியை அணுக எமக்கு என்ன உரிமை இருக்கிறது?. பிரதியின் சுயத்தினை கவர்ந்து சிறைப்படுத்துவது உண்மையான தர்மமா? மீளவும் அந்தப் பிரதிக்கு வெளியில் இருந்தே அறங்கள் விழுமியங்கள் கற்பிக்கின்றனவே தவிர, பிரதியை சுய ஆதாரமாக மாற்றாமல் விடுகின்றமை நியாயமா? இந்த நிலைக்கு பிரதியைத் தள்ளிவிடுகின்ற மதீப்பீட்டின் அதிகாரத்தினைதான் நாம் எதிர்க்கிறோம்.

நீட்ஷே குறிப்பிட்டுச் சென்ற மறு மதிப்பீட்டு முழக்கம் இதுதான் என நினைக்கிறேன் தோழரே. உன் மீதான அனைத்து மதீப்பீடுகளையும் நீ மறுத்து உன்னையே நீ மதீப்பிடு என்றான் நிட்ஷே. ஒவ்வொன்றையும் அதுவே மதீப்பிடட்டும். அதாவது உங்கள் மீது அதிகாரம் செலுத்துவது நீங்கள் மட்டுமே. அதே போல் என் மீதும் என் பிரதிமீதும் மதீப்பீடு செய்வதும் அதிகாரம் கொண்டதும் நான் மட்டுமே. உன்னையும் உன் பிரதிகளையும் மதீப்பீடு செய்ய நான் எந்த உரித்துடையவனும் அல்ல. இந்த வகையில் தான் பகுத்தறிவு ஏற்படுத்திய அனைத்து மதீப்பீடுகளையும் அதன் அதிகாரங்களையம் நாம் கேள்விக்குட்படுத்தி அதனை மறுத்து நிற்கிறோம்.

மேலும் இன்னொன்று, இந்த மதீப்பீட்டிற்கு பிரதான காரணம் நமது அறிதல் முறைகளில் காணப்படுகின்ற விளைவுகளே. ஒருவரில் நாம் உரிமை எடுத்துக் கொள்கிறோம் எனும் போது அவரில் நாம் அதிகாரமுடையவராக மாறுகிறோம் என்பது பொருளல்லவா? அங்கும் ஒவ்வொரு நிகழ்வும் மதீப்பிடவேபடுகிறது. இதுதான் அதிகாரம் என்கிறோம்.

இது பகுதி I தானே நண்பரே, இயலுமானவரை உரையாடுவோம் காத்திருக்கிறேன்.

பர்ஸான்.ஏஆர்.

5 comments:

ஜமாலன் said...

//"சிறந்தது", "நல்லது", "அருமையானது" என்பவையும் அவற்றின் எதிர்பதமும் தரும் ""மதீப்பீடு""" என்ற அதிகாரச் சொல்லின் மீதுள்ள அச்சம் காரணமாக எதைப்பற்றியும் இறுதி வார்த்தை கூறமுடியாதுள்ளது.//

//""மதீப்பீடு""" என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக பர்சான் முடிவெடுத்துக் கொண்டதற்கான நியாயம் என்னவென்பதுதான் புரியாமலிருக்கிறது.//

தோழருக்கு... மேற்கண்ட உரையாடலை படித்தபோது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. காரணம் வழக்கமாக பதிவுலகில் இதுபோன்ற 'அதிர்ச்சிகளை சநதித்ததால்' அதனை நான் தீவிரமாக கவனிக்கவில்லை. காரணம் இதுபோன்ற சில வாக்கியங்கள் எழுதப்படுவது என்பது ஒரு வழக்கமான பெயர் கருத்து உதிர்க்கும் ஒரு செயலாகவே கருதினேன். உங்களது உரையாடலின் அடுத்தக்கட்டமாக வந்துள்ள இந்த பதிவு உண்மையில் உங்களது சீரிய ஆர்வத்தை முன்வைத்தது. தவிரவும் டெல்யூஸ் எல்லாம் பேசுபவர்கள் அவரது சினிமா கலை என்பதாகவே பேசுவதைக் காணலாம். அதிகாரம் மதிப்பீடுகள் சார்ந்த கருத்தாடல்களை அதிகம் பேசுவதில்லை. நீ்ங்கள் அதனை பேசுகிறிர்கள். உங்களது கருத்துடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

சிறந்தது நல்லது அருமையானது போன்ற வார்த்தைகளின் அதிகாரச் சொல்லாடல்கள் தவிர்த்த ஒரு எழுத்துமுறையை விமர்சனத்தை எழுதும்போது அது ஒரு ஆய்வாக படைப்பாக மாறுகிறது.

மதிப்பீடு என்பது முழுக்க முழுக்க அதிகாரத்தின் சொல்லாடல்தான். புரிந்துகொள்வது என்பது வேறு அல்லது ஒன்றை விளக்குவது என்பது வேறு. மதிப்பீடு என்பது சமூக விழுமியங்களைக் கொண்டது. சமூக விழுமியம் என்பது அதிகாரத்துவத்தின் பொதுமையை வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டது. அதாவது அதிகாரம் முன்வைத்துள்ள தினவாழ்விற்கான வெளி. அந்த வெளிக்குள் புழங்க அதற்கான மதீப்பீட்டு விதிகளுக்குள்தான் அதனை அங்கீகரித்துதான் புழங்க வேண்டும். அதிகாரத்தை எதிர்ப்பது என்பதுகூட அதிகாரம் அனுமதிதத ஒரு வெளிக்குள்தான் சாத்தியம் . இந்த வெளி மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. (இது குறித்து நான் மதிப்புருவாக்க எந்திரங்கள் என்கிற ஒரு தனிக்கட்டுரை எனது உடல் அரசியல் எனகிற கட்டுரையின் பகுதியாக எழுதியுள்ளேன். அதனால் விரிவாக இங்கு வேண்டாம்.). சுருக்கமாக ஒவ்வொரு சமூக அமைப்பும் அதற்கான மதிப்பீட்டு விதிகளை கொண்டுள்ளது. அவ்விதிகளின் அடிப்படையில்தான் சமூக வாழ்வின் புழங்கும் உடல்களின் வாழ்தலின அவற்றின் உயிரின் மதிப்பு தீர்மாணிக்கப்படுகிறது. ஆக மதிப்பிடுதல் என்பது ஒரு அதிகார வினை என்பதே எனது நிலைப்பாடு. அதனால் மதிப்பீடுகளற்ற ஒரு மொழி சுழிநிலையான மொழி சாத்தியமாக நாமும் மதிப்பீடற்ற ஒரு விமர்சனமுறையை எழுத்து முறையை உருவாக்கவேண்டும். இது தொடர் உரையாடல்களில் மட்டுமே சாத்தியம். மேலதிகமாக இதனை பேசலாம் உரையாடல் தொடர்ந்தால் தொடரலாம்.

அருமையான பதிவு உங்களது. தொடருங்கள். பதிவுலகிற்கு உங்களைப் போன்ற ஆழ்ந்த பதிவர்களை வரவேற்கிறேன்.

ஃபஹீமாஜஹான் said...

பர்ஸான்,
இந்தப் பதிவை வரவேற்கிறேன்.

ஆரோக்கியமான உரையாடல்களுடன் இந்தப் பதிவு தொடரட்டும்.

நேற்று இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு அதிக நேரம் யோசித்தேன்.ஆழமான விடயங்களைப் பேசி இருந்தீர்கள்.நான் இந்த உரையாடலில் பங்கு பற்ற இன்னும் இவை பற்றிய வாசிப்புத் தேவையாக உள்ளது.

இந்த உரையாடலில் ஜமாலன் அவர்கள் கலந்துகொள்வது மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

பஹீமாஜஹான்

மு. மயூரன் said...

இந்தப் பதிவு முழுமையும் அதிகாரத்துக்கெதிரான, பகுத்தறிவு வழிபாட்டுக்கெதிரான, மதிப்பீட்டுக்கெதிரான சாய்வினைக்கொண்டிருப்பதுடன், அவை மீதான மதிப்பீட்டை முன்வைக்கத் தீவிரமாக முனைவதாக நான் உணர்கிறேன்.
உங்களுக்கு எப்படி?

அசரீரி (Fatheek) said...

உடனேயே நான் பின்னூட்டமிடாததற்கு மன்னியுங்கள் பர்ஸான்
//""மதீப்பீடு""" என்பதை அதிகாரத்தின் மொழிக்கு மட்டுமே உரியதானதாக..//பர்ஸான் முடிவெடுத்ததன் காரணத்தைக் கேட்டது
//அது வேறு பயணத்திற்கானதாய் இருப்பினும் தன்பாதை மாற்றத்துடன் நம்முடனும் பயணிக்க முடியுமல்லவா?// என்பதை மெய்ப்படுத்துவதாக இத்தகைய ஒரு பெரும்உரையாடலின் தொடக்கமாக முடிந்திருக்கிறது.
உண்மையில் மதிப்பீடு என்பதன் பின்னாலிருந்து தொழிற்படும் அதிகாரத்தின் முகம் பற்றிய மிகத் தெளிவான புரிதலை பர்ஸானின் இந்த பதிலுரையாடலிலிருந்தும் பெற முடிந்தது மிகவும் பயனுள்ளது.
கல்வியில் தொடங்கி கடைக்கார முதலாளியிடம் சீனிவாங்குவது வரையிலும் அதிகாரத்தின் நுண்ணிய துணிக்கைகளின் பரம்பல் தவிர்க்க முடியாததாகி நம்மைச் சூழ்ந்திருப்பது நாம் ஒவ்வொருவரும் உணர்கின்ற ஒன்றுதான்.இதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவுமில்லை. ஆனால்
சிறந்தது நல்லது முதலான சொல்லாடல்களின் வெளிப்பாடு அதிகாரத்தின் மொழியாக மாத்திரம்தான் வெளிவரமுடியுமா என்பதுதான் நான் கேட்க வருவது
ஏனெனில் ஜமாலன் கூறுவது போன்று
//சிறந்தது நல்லது அருமையானது போன்ற வார்த்தைகளின் அதிகாரச் சொல்லாடல்கள் தவிர்த்த ஒரு எழுத்துமுறையை விமர்சனத்தை எழுதும்போது அது ஒரு ஆய்வாக படைப்பாக மாறுகிறது.//
நமது ஆய்வுகளின் சீரியத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்படியான அதிகாரங்களாக இச்சொல்லாடல்கள் இருக்கின்றன என்பது முழுக்கவே ஏற்கக்கூடியது என்ற போதும் முழுக்கவே அதிகாரம் தவிர்க்கப்பட்ட ஒரு எழுத்தாக்கத்தில் இத்தகைய சொல்லாடல்களுக்கு உபயோகமே இல்லாமல் போய்விடுமா?? அல்லது அவை உதிக்கவே உதிக்காதா??
இத்தகைய கேள்வியிலிருந்து எனக்குப்படுவதெல்லாம் மதிப்பீடு என்பதும் ஒரு சூழலில் அதிகாரத்தின் தொழிற்படு கருவியாகப் பயன்படுகிறது என்பதுதான்.இங்கே உடைக்கப்பட வேண்டியது மதிப்பீடு என்கின்ற அதிகாரத்தின் புறக்கருவியல்ல மாறாக அதன் பின்னாலுள்ள அதிகாரத்தின் முகமே..
நீங்கள் சொல்வது போல நமது நாட்டின் கல்வியில் இதைத் தெளிவாகவே காணலாம்,
நமது வரலாற்றுக் கல்வி இன்னும் நம்மை எல்லாளனின் படையெடுப்புக் காலத்தை விட்டும் நகர விடுகுதில்லை.
(தொடர்ந்தும் எழுதுகிறேன் இன்னும் பேசுவோம்)

ஜமாலன் said...

இது பிரசுரத்திற்கு அல்ல

நண்பருக்கு..

http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_10.html

இச்சுட்டியைப்பார்க்கவும். தொடரும் மதிப்பீடுகள் பற்றி எழுதவும்.
அன்புடன்
ஜமாலன்